குலசேகரம் போலீஸ் நிலையத்தில் காதலனை போராடி கரம் பிடித்த நர்சு: தாயின் பாசப்போராட்டம் தோல்வி..!!
குலசேகரம் அருகே மாமூடு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23), கூலி தொழிலாளி.
தும்பக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராம்சுபி (22) இவர் குலசேகரத்தில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். ராம்சுபி அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் போது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்த்துடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. காதல் விவகாரம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்தது. காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அரவிந்த், ராம்சுபி வீட்டிற்கு சென்று திருமணம் செய்வதற்கு பெண் கேட்டார். ஆனால் அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து ராம்சுபி வீட்டை விட்டு வெளியேறினார். அரவிந்த்தும், ராம்சுபியும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு குலசேகரம் போலீசில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து இரு வீட்டார் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராம்சுபியின் தாயாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தார். மகளை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் ராம்சுபி, தனது காதலனுடன்தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதனால் ராம்சுபியின் தாயார் கண்ணீர் விட்டு கதறி அழுதார். பாசப்போராட்டம் தோல்வியில் முடிவடைந்ததால் ராம்சுபியிடம் அவர் அணிந்துள்ள நகையை கழற்றி தருமாறு தாயார் கூறினார். ஆனால் ராம்சுபி என்னுடைய சம்பள பணத்தில் வாங்கிய நகை ஆகும்.
எனவே நகையை கழற்றி தர முடியாது என்று கூறினார். இதனால் மனம் உடைந்த அவரது தாயார் எனது மகளுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எழுதிக்கொடுத்து விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினார். காதல் ஜோடியை போலீசார் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
Average Rating