சீனாவில் நிலச்சரிவில் சிக்கிய வாலிபர், 60 மணி நேரத்துக்கு பின் உயிருடன் மீட்பு…!!
சீனாவில் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் மலைபிரதேசத்தில் உள்ள ஷென்சென் ஒரு தொழில் நகரமாகும். இங்கு கார்கள் முதல் செல்போன் வரை அனைத்து பொருட்களும் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
இதனால் அங்கு சீனாவின் பல பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தங்கி பணிபுரிகின்றன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு பெய்த பலத்த மழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
அதில், தொழிற்பேட்டையில் உள்ள 33 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி மண்ணுக்குள் புதைந்தன. 70–க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.
அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மூடிக்கிடக்கும் மண் மற்றும் கல் குவியலை தோண்டி உள்ளே சிக்கி தவிப்பவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தியான் ஷெமிங் என்ற 19 வயது வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார். இவர் தென்மேற்கு சீனாவில் உள்ள சாங்குயிங் பகுதியை சேர்ந்தவர். இவரை ரயோ லியாங்ஷாங் அவசர கால மீட்பு அலுவலக ஊழியர்கள் மீட்டனர்.
தியான் ஷெமிங் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தவிர அவர் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஷென்சென் நகரில் நிலச்சரிவு ஏற்பட்ட 60 மணி நேரத்துக்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இது அதிசயமான நிகழ்வாக கருதப்படுகிறது.
Average Rating