இந்தியாவில் மொபைல் விற்பனை : அதிகரிப்பு: ஆசியாவில் முதலிடம்
இந்தியாவில் நடப்பு காலாண்டில் 24.5 மில்லியன் மொபைல் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ஆசியாவில் முதலிடம் பெற்றுள்ளது. ஆசியாவிலேயே இந்தியாவில் தான் மொபைல் போன்களின் விற்பனை அதிகமாக உள்ளது. நடப்பு காலாண்டில் மட்டும் 24.5 மில்லியன் மொபைல் போன்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்த மொபைல் போன் விற்பனைக்கு, மொபைல் சேவை நிறுவனங்கள் இடையே ஏற்பட்டுள்ள தொழில் போட்டி முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும், மொபைல் போன் விற்பனையை அதிகரிக்க வர்த்தக ரீதியாக சில சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய மொபைல் போன்களை கொடுத்து புதிய மொபைல் போன்களை பெற்றுக் கொள்ளும் `எக்சேஞ்ச்’ திட்டம் சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் சேவை நிறுவனங்கள் தங்கள் சேவையை கிராமப்புறங்களில் விரிவுபடுத்தியுள்ளது. இதன் காரணமாக, கிராமத்தினரும் தற்போது அதிகமாக மொபைல் போன்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
மொபைல் போன் சேவை நிறுவனங்கள் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பல புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதனால், மொபைல் போன் விற்பனை அதிகரிப்பதுடன், சேவைகளும் அதிகரித்து வருகிறது. மேலும், மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் புதிய மாடல்கள், சிலிம் மாடல்கள், கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் அனைத்து தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய மாடல்கள் என பல்வேறு புதிய மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த தலைமுறையினரை கவரும் வகையில் புதிய மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த மொபைல் போன் விற்பனையில் நோக்கியா நிறுவனம் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது. இந்த காலாண்டில் 110.2 மில்லியன் போன்களை விற்பனை செய்து சந்தை மதிப்பில் 38.1 சதவீத இடத்தை பிடித்துள்ளது. சாம்சங் நிறுவனம் 41.8 மில்லியன் போன்களை விற்றுள்ளது.
சோனி எரிக்சன் நிறுவனம் 25.4 மில்லியன் போன்களை விற்பனை செய்துள்ளது. அடுத்த காலாண்டில், மொபைல் போன்களின் விற்பனை இந்த காலாண்டை விட 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.