* பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் அதனையண்டிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வன்முறைகளில் ஈடுபட்டு வந்த கலகக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்தவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி எச்சரித்துள்ளார். இக்கலவரத்தில் காயமடைந்த பொலிஸாரை பார்வையிடச் சென்ற சார்கோஸி இவ் வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு சிறுவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரின் காரொன்றுடன் மோதியதில் அவ்விருவரும் பலியானமையைத் தொடர்ந்தே இக் கலவரங்கள் ஆரம்பமாகின. தலைநகரை அண்டிய பகுதிகளில் தொடரும் கலவரங்களில் இதுவரை 120 இற்கும் அதிகமான பொலிஸார் காயமடைந்துள்ளனர். இவ் விபத்தில் பலியான சிறுவர்களின் குடும்பத்தினரையும் சார்கோஸி சந்தித்ததாகவும் இது தொடர்பான விசாரணைகளை நடத்துவதாக உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மேலும், வன்முறைகள் பரவுவதைத் தடுப்பது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர்கள் மட்ட சந்திப்பொன்றையும் சார்கோஸி நடத்தியுள்ளார். தற்போது வன்முறைகள் தணிந்துள்ள போதும் அவை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதனால், அப்பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவுக்கான விஜயத்தை நேற்று முன்தினம் முடித்துக் கொண்ட சார்கோஸி காயமடைந்த பொலிஸார் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று அவர்களை பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையில்; பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை சிறிதளவும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு கொலை முயற்சி. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறான செயல்களை எம்மால் சகிக்க முடியாது. இச் சிறுவர்களின் விபத்து நாடகமாகவும் இருக்கலா’மெனத் தெரிவித்துள்ளார்.