தமிழர்கள் போராட்டம்: எங்கள் உள்நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டாம்! -மலேசிய அரசு சொல்கிறது
“எங்கள் நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டாம்” என்று மலேசிய மந்திரி கூறி உள்ளார். மலேசிய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதமாக இருப்பவர்கள் இந்திய வம்சாவளியினர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். இவர்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தங்களுக்கு சம உரிமை கேட்டு, கடந்த 25-ந் தேதி தலைநகர் கோலாலம்பூரில் பிரமாண்டமான பேரணி நடத்திய போது, அந்நாட்டு போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மலேசிய தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதினார். அதற்கு மலேசிய உள்விவகாரத்தில் தலையிடுவதாக கூறி கருணாநிதிக்கு அந்நாட்டு மந்திரி முகமது நஸ்ரி அப்துல் அஜீஸ் கண்டனம் தெரிவித்தார். இது பாராளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியது. கருணாநிதி பற்றி மலேசிய மந்திரி தெரிவித்த கருத்துக்கு கட்சி பாகுபாடின்றி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மன்மோகன் சிங் கவலை
அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், மலேசியாவில் நடந்த சம்பவம் கவலை அளிப்பதாக உள்ளது என்றார்.
டெல்லி மேல்-சபையில் பாராளுமன்ற விவகார ராஜாங்க மந்திரி சுரேஷ் பச்சோரி கூறுகையில்; இந்த பிரச்சினை பற்றி மத்திய அரசு தூதரக மட்டத்தில் மலேசிய அரசுடன் பேசி வருவதாக தெரிவித்தார்.
மலேசிய மந்திரி பேட்டி
இந்நிலையில் மலேசிய வெளியுறவு மந்திரி சையது ஹமீது அல்பார் நேற்று ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்; மலேசிய குடிமக்கள் சட்டத்தை மீறும் பட்சத்தில், அவர்களை எங்கள் நாட்டின் சொந்த சட்டங்களின்படி கையாள எங்களுக்கு உரிமை உள்ளது. இது விஷயத்தில் வேறு எந்த நாடும் தலையிட வேண்டாம் என்று தெரிவித்தார்.