கூலித்தொழிலாளியை கரம் பிடித்த பிளஸ்–1 மாணவி தற்கொலை..!!
கோவை செட்டிபாளையம் சமத்துவபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் திவ்யா (வயது 16). அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.
திவ்யாவும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது குறித்து பெற்றோருக்கு தெரிய வந்ததும் திவ்யாவை கண்டித்தனர். ஆனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி மாணவி காதலனை சந்தித்து பேசி வந்தார்.
இது குறித்து மீண்டும் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி இனிமேல் தங்களை பிரித்து விடுவார்கள் என்று அஞ்சினர்.
இந்நிலையில் கடந்த 23–ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவை ஈச்சனாரி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மகளை காணவில்லை என்று திவ்யாவின் தந்தை பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் திவ்யாவை தேடினர். போலீசாரிடம் சிக்கிய காதல் ஜோடியை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.
அங்கு மாணவி திவ்யாவுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். 16 வயது என்பது திருமண வயது அல்ல. சட்டப்படியும் செல்லாது. படிக்க வேண்டிய வயது. நன்றாக படிக்க வேண்டும். 18 வயது முடிவடைந்ததும் மேஜராகி விடலாம். அப்போது சுயமாக சிந்திக்கும் நிலையை எட்டிவிடுவாய். அப்போது மணிகண்டனையே திருமணம் செய்துகொள்ள விரும்பினால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கினர். பின்னர் மாணவியை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
பெற்றோருடன் சென்ற திவ்யா யாரிடமும் பேசாமல், சாப்பிடாமல் இருந்தார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் திவ்யாவை சமாதானம் செய்ய முயன்றனர். சிறிது நேரம் கழித்து அனைவரும் தூங்கினர்.
காலையில் எழுந்து பார்த்தபோது திவ்யா மயங்கிய நிலையில் கிடந்தார். விடிய விடிய அழுது புலம்பிய திவ்யா சாணிப்பவுடர் கலந்து குடித்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக மகளை மீட்ட பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating