முகமாலையிலேயே கண்ணிவெடி அபாயம் அதிகம்..!!
ஈராக்கை விட முகமாலையிலேயே அதிக கண்ணிவெடிகள் அபாயம் காணப்படுவதாக கண்ணிவெடி அகற்றும் மனித நேய அமைப்பான ஹலோ டிரஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உலகில் அதிக கண்ணிவெடிகள், பொறிவெடிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் காணப்படும் அபாய பிரதேசமாக முகமாலை காணப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தாம் கண்ணிவெடி அகற்ற ஆரம்பித்த கடந்த 13 வருடங்களில், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இதுவரை இரண்டு இலட்சம் மனித எதிர்ப்பு வெடிகளும், நாற்பத்தோராயிரத்து அறுநூற்று ஒரு பரந்து கிடந்த வெடிபொருட்களும், இருபத்து இரண்டாயிரத்து எழுநூற்று எழுபத்தெட்டு வெடிக்காத பொருட்களும், எண்ணூற்று எழுபத்தைந்து வாகன எதிர்ப்பு வெடிபொருட்களும், ஆறு இலட்சத்து எழுபத்தோராயிரத்து எழுநூற்று இருபத்துநான்கு வெடிபொருட்களின் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை,கடந்த 2014ஆம் ஆண்டு முகமாலை பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டபோதும், வெடிபொருட்கள் முழுமையாக அகற்றப்படாத காரணத்தால் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.
பின்னர், ஏ-9 வீதியின் வடக்குப் பக்கமாக வெடிபொருட்கள் முற்றாக அகற்றப்பட்ட 1.7 கிலோமீற்றர் நீளமும் 200 மீற்றர் அகலமும் கொண்ட காணி விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேற அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating