பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை
சங்கரன்கோவிலில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் கச்சேரி ரோட்டைச் சேர்ந்த கந்தம்மாளின் மகள் மாதாளை. இவருக்கும் கோவில்பட்டியை சேர்ந்த ஆறுமுகத்திற்கும் திருமணமாகி மாரியம்மாள் என்ற மகள் இருக்கிறார். மாரியம்மாள் சங்கரன்கோவிலில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு போவதாக பாட்டியிடம் சொல்லிவிட்டு பள்ளி சீருடையுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார். பின்னர் மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாரியம்மாள் வயிறு வலிப்பதாக தனது பாட்டியிடம் கூறியுள்ளார். மருந்து வாங்க கந்தம்மாள் வெளியே சென்ற நேரத்தில் மாரியம்மாள் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய கந்தம்மாள் பேத்தி தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாரியம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாட்டி கந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாரியம்மாளின் மரணத்தை குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.