பாகிஸ்தான் நிலநடுக்கத்தில் 4 பேர் பலி: 100 பேர் காயம்…!!
ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள படாக்ஷன் மாகாணத்தில் 6.2 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் காபூல் உள்ளிட்ட நகரங்கள் குலுங்கின.
அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு ரிக்டரில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கம் குல்ஜிட்–பலுகிஸ்தான் மாகாணத்தில் உணரப்பட்டது. பெஷாவர், லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி ஆகிய பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் பீதி அடைந்த மக்கள் நள்ளிரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தெரியாமல் இருந்தது.
தற்போது இந்த நிலநடுக்கத்தில் 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 100–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் பெஷாவர், லாகூர் உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கில்ஜிட்– பலுகிஸ்தான் மாகாணத்தில் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என முதல்–மந்திரி ஹபீஷ் ஹபீசுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கம் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கும் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.
Average Rating