உலக அழகி சாங் ஜிலினுக்கு சீனாவில் அமோக வரவேற்பு
உலக அழகி பட்டம் வென்ற சாங் ஜிலினுக்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கம்யூனிஸ்ட் நாடான சீனாவின் ஹெய்னான் மாகாணத்தில் உள்ள சான்யா நகரில் நேற்று முன்தினம் இரவு உலக அழகி போட்டி நடந்தது. இதில், சீனாவைச் சேர்ந்த 23 வயதான சாங் ஜிலின் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கோலாவைச் சேர்ந்த மிகேலா ரெய்சுக்கு இரண்டாவது இடமும், மெக்சிகோவைச் சேர்ந்த கரோலினா கார்டிலோவுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. உலக அழகி போட்டியில் சீனா வெற்றி பெற்றது இது தான் முறை. பீஜிங்கில் செக்ரட்டரியாக பணிபுரியும் சாங் ஜிலின், ஷிஜியாசுவாங் என்ற இடத்தைச் சேர்ந்தவர். சாங் ஜிலின் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை வரவேற்று இன்டர்நெட்டில் ரசிகர்கள் பலர் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். சீனா டாட்காம் இணையதளத்தில் சாங் ஜிலினுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு கோடி ரசிகர்கள் வாழ்த்து அனுப்பியுள்ளனர். அழகி போட்டி மற்றும் இதர போட்டிகள் முன்னர், கம்யூ., தலைமையினால் வெறுக்கப்பட்டு வந்தது. ஆனால், சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற போட்டிகள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான தேர்வு மற்றும் சிறந்த பாடகர்களுக்கான போட்டிகளை நடத்தி வருகின்றன.
இது போன்ற போட்டிகளை கட்டுப்படுத்த சீன அரசு முயன்று வருகிறது. `பிரைம் டைம்’களில் `டேலன்ட் ஷோ’க்கள் நடத்துவதற்கு சீன அரசு தடை விதித்துள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், போட்டியாளர்களும் கவர்ச்சிகரமான உடை அணியக்கூடாது என்று அரசு வலியுறுத்தியுள்ளது. சாங் ஜிலின் உலக அழகியாக தேர்வாகியிருப்பது குறித்து அந்நாட்டு பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பீஜிங்கில் இருந்து வெளிவரும், `பீஜிங் நியூஸ்’ பத்திரிகை சாங் ஜிலின் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை சிறிய அளவிலே செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.