தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: 3 வயது குழந்தையுடன் இளம்பெண் பலி…!!
திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனையைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (வயது 27). இவர் திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரவீனா (24).
இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டு திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு நிரஞ்சனா (3) என்ற மகள் உள்ளார்.
இன்று உன்னிகிருஷ்ணன் தக்கலை அருகே குமார கோவிலில் உள்ள வேளிமலை முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்ய முடிவு செய்தார். அதன்படி அதிகாலையிலேயே அவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்டனர். உன்னிகிருஷ்ணன் மோட்டார்சைக்கிளை ஓட்ட பின்னால் பிரவீனாவும், நிரஞ்சனாவும் அமர்ந்திருந்தனர்.
காலை 6 மணிக்கு மார்த்தாண்டத்தை கடந்து காட்டாத்துறை பகுதியில் அவர்கள் வந்து கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் குழந்தை நிரஞ்சனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தாள். பிரவீனா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவரும் இறந்தார். உன்னிகிருஷ்ணன் மட்டும் காயத்துடன் தப்பினார்.
பலியான மனைவி மற்றும் குழந்தை உடலை பார்த்து உன்னிகிருஷ்ணன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரை தேற்ற முடியாமல் அங்குள்ளவர்கள் தவித்தனர்.
விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் காரில் சென்றவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
விபத்து பற்றி கேரளாவில் உள்ள உன்னிகிருஷ்ணன் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தக்கலைக்கு விரைந்து வந்தனர்.
Average Rating