ரயில் நிலையத்துக்காக பள்ளம் தோண்டும்போது சாமி சிலைகள் கண்டெடுப்பு
ரயில் நிலையம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லட்சுமி நரசிம்மர் சிலை மற்றும் கருட ஆழ்வார் சிலைகள் கிடைத்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது சேர்ந்தனூர் கிராமம். இங்கு புதிதாக ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. நடைமேடை அமைப்பதற்காக சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த இடத்தில் 2 சாமி கல் சிலைகள் இருந்தது தெரியவந்தது. பூமியில் சாமி சிலைகள் கிடைத்த தகவல் கிராம மக்களுக்கு தெரிந்ததும் அவர்கள் அனைவரும் அந்த இடத்தில் குவிந்தனர். இதைத் தொடர்ந்து பூமியில் இருந்த சாமி சிலைகளை வெளியே எடுத்து பார்த்தபோது 3 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் சிலையும், நான்கரை அடி உயரத்தில் கருட ஆழ்வார் சிலையும் இருந்தது. சிலைகளுக்கான 2 பீடங்களும் கிடைத்தது. பின்னர் அச்சிலைகளை சுத்தம் செய்த கிராம மக்கள் அவற்றிக்கு மாலை போட்டு, அர்ச்சனை செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். சேர்ந்தனூர் கிராம மக்கள் மட்டுமின்றி தென் குச்சிபாளையம், தளவானூர், திருப்பாச்சனூர், பில்லூர் கிராம மக்களும் சாமி சிலைகளை வழிப்பட்டனர். சிலைகள் கிடைத்தது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டாச்சியர் (பொறுப்பு) கருப்பசாமி, தாசில்தார் ராஜூ ஆகியோர், 2 சாமி சிலைகளையும் மீட்டு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி தொல்பொருள் ஆய்வு துறைக்கும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் ஆய்வுக்கு பிறகு சாமி சிலைகள் இரண்டும் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது பற்றி தெரியவரும்.