நொச்சிகாமம் சண்டியன் நள்ளிரவில் சுட்டுக் கொலை
நொச்சிகாமம் நகரில் பிரபல சண்டியர்களுள் ஒருவரான வஸந்த (வயது 34) என்பவர் சனிக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நொச்சிகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் வீட்டுக் கூரையினால் வீட்டினுள் உட்புகுந்த ஆயுததாரிகளே வசந்தவைக் கொலை செய்துள்ளதாக, ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக நொச்சிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பியல் கருணாரத்ன தெரிவித்தார். வீட்டினுள் புகுந்த ஆயுததாரிகள் வசந்தவின் மீதும் அவரது மனைவி மீதும் சரமாரியாகத் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துள்ளனர். இதன் போது படுகாயமடைந்த வசந்தவும் சிறு காயங்களுக்குள்ளான வசந்தவின் மனைவியும் நொச்சிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, வசந்த அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட போது இடையில் மரணமடைந்துள்ளார். தனிப்பட்ட குரோதம் காரணமாகவே இக்கொலை நடைபெற்றிருக்கலாம் எனக்கருதும் நொச்சிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.