மலேசியாவில் தவறான பாதையில் சென்ற ஏர்லைன்ஸ் விமானம்: கவனக்குறைவு என விளக்கம்…!!
கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆக்லாந்து நகரில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பாதை மாறி பறந்ததாக வெளியான செய்தியை மலேசியா ஏர்லைன்ஸ் உறுதிபடுத்தியுள்ளது.
எம்எச் 132 விமானம், கடந்த வெள்ளிக்கிழமை காலை, நியூசிலந்தின் ஆக்லாந்து நகரில் இருந்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குச் சென்றுகொண்டிருந்தது.
விமானம் புறப்பட்ட 8-வது நிமிடத்தில் தான், விமானம் தவறான பாதையில் செல்வதை விமானி உணர்ந்துள்ளார். வடக்கு பகுதிக்கு பதிலாக ஏன் தெற்கு திசையை நோக்கி செல்ல உத்தரவிடப்பட்டது என்று பைலட் வினவியுள்ளார். கோலாலம்பூர் செல்ல வேண்டிய விமானம், தவறாக மெல்போர்ன் வழித்தடத்திற்கு திரும்பி உள்ளது.
விமானத்தின் பாதை மாறியதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர், விமானத்தை மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, நியூசிலாந்தின் விமான சேவைப் போக்குவரத்து அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
விமானிக்கும், ஆக்லாந்து நகர் ஆகாயக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இரண்டு வெவ்வேறு பாதைகளுக்கான தகவல்கள் வழங்கப்பட்டதை மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
முன்னதாக கடந்த ஆண்டில் மலேசியாவை சேர்ந்த இரண்டு விமானங்கள் மாயமாகின. அதில் எம்.ஹெச்.370 விமானம் விபத்துக்குள்ளானதில் 239 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating