புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கோர்ட்டில் புகுந்து தீக்குளிக்க முயன்ற மாணவர்..!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஆக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் விஜயன் (வயது 26). எம்.ஏ. படித்து வருகிறார். விஜயனுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜயன், உறவினர் மீது தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகாரின் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் கலெக்டருக்கும் புகார் மனு அனுப்பியதாகவும் தெரிகிறது. அந்த மனுக்கள் மீதும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
தான் கொடுத்த எந்த புகார் மனுக்களுக்கும் தீர்வு கிடைக்காததால் விஜயன் ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில், செய்யாறு கோர்ட்டுக்கு விஜயன் நேற்று மதியம் வந்தார். அப்போது உணவு இடைவேளை முடிந்து கோர்ட்டில் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடந்து கொண்டிருந்தது.
இதையறிந்த விஜயன், தான் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணை கேனுடன் கோர்ட்டுக்குள் புகுந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மண்எண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வக்கீல்கள் மற்றும் போலீசார், விரைந்து ஓடிச்சென்று விஜயனிடம் இருந்த மண்எண்ணை கேனை கைப்பற்றினர்.
பின்னர் அவர் செய்யாறு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார், கோர்ட்டு பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது, தற்கொலைக்கு முயன்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்தனர்.
இதனால் கோர்ட்டு பணிகள் 20 நிமிடத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டது. கோர்ட்டில் மாணவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், செய்யாறில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating