அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் தனியாக பயணம் செய்து புதிய உலக சாதனை…!!
பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு துடுப்புப் படகு மூலம் தனியாக பயணம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
53 வயதான ஜோன் பீடன் எனும் இவர், 209 நாட்கள் தொடர்ச்சியாக பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் முதலாம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து இப்படகுப் பயணத்தை ஜோன் பீடன் ஆரம்பித்தார்.
அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு ஊடாக பயணம் செய்த அவர், கடந்த 26 ஆம் திகதி அவர் அவுஸ்திரேலியாவின் வடபிராந்திய நகரான கெய்ன்ஸ் நகரை சென்றடைந்தார்.
மொத்தமாக 6,100 கடல்மைல்கள் அவர் பயணம் செய்துள்ளார்.
இதன் மூலம் தொடர்ச்சியாக 209 நாட்கள் கடலில் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார் பீடன். உலக சாதனை படைக்கும் நோக்குடனேயே அவர் இப்பயணத்தை மேற்கொண்டார்.
140 முதல் 180 நாட்களில் இப்பயணத்தை நிறைவுசெய்யலாம் என தான் எண்ணியிருந்ததாக ஜோன் பீடன் கூறுகிறார்.
எனினும், சீரற்ற காலநிலையால் அவரின் இப்பயணத்தில் தாமதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தான் எண்ணியதைவிட 100 மடங்கு கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
துடுப்புப் படகில் இடைவிடாமல் தொடர்ச்சியாக பயணம் செய்து பசுபிக் சமுத்திரத்தைக் கடந்ததன் மூலம், புதிய சாதனை படைத்ததன் மூலம் அவர் புதிய உலக சாதனைக்குரியவராகியுள்ளார்.
இதற்குமுன் 9 தடவைகள் பலர் அத்திலாந்திக் சமுத்திரத்தை துடுப்புப் படகு மூலம் கடந்துள்ளனர். ஆனால், இப்பயணங்கள் பகுதி பகுதியாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.
முதல் தடவையாக 1972 ஆம் ஆண்டு ஜோன் பெயர்பெக்ஸ் மற்றும் சில்வியா குக் ஆகிய இருவர் இத்தகைய பயணத்தை நிறைவுசெய்திருந்தனர்.
தினமும் 15 மணித்தியாலம் படகை செலுத்தியதாகவும் 209 நாட்களின் பின்னர் மீண்டும் நிலத்தில் கால்பதித்தமை குறித்து தான் நிம்மதியடைவதாகவும் ஜோன் பீடன் தெரிவித்துள்ளார்.
இவர் ஏற்கெனவே அத்திலாந்திக் சமுத்திரத்தை படகு மூலம் 53 நாட்களில் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating