சைவ நெறி பாடப்புத்தகங்களில் எழுத்துப் பிழைகள்: இந்து மாமன்றம் ஜனாதிபதிக்குக் கடிதம்…!!
கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் தயாரித்து விநியோகிக்கப்பட்டுள்ள தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையிலான சைவ நெறி பாடப்புத்தகங்களில் வெளிப்படையான பிழைகள் காணப்படுவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பிழைகள் திருத்தப்படும் வரை மாணவர்களுக்கு அவற்றை விநியோகிப்பதை நிறுத்துமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்று இந்து மாமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இம்முறை அச்சிடப்பட்டுள்ள சைவ நெறி பாடப்புத்தகங்களில் வெளிப்படையான பிழைகள் காணப்படுவது கல்விமான்களால் கண்டறியப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
பிழைகளுடன் கூடிய புத்தகங்களைப் பயன்படுத்தி கற்பிப்பதனால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே நன்கு அறிந்த கல்வியியலாளர் குழுக்களினால் புத்தகம் மறுபரிசீலனை செய்யப்பட்டு திருத்தப்பட்ட புத்தகங்கள் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் குறித்த கடிதத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் அனுமதியளித்தால் சிறந்த புத்திஜீவிகளைக் கொண்டு புத்தகங்களில் உள்ள பிழைகளை திருத்தி பரீசீலனை செய்து திருத்திய வரைபினை அரசாங்கத்திற்குக் கையளிப்பதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதிகள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், மீள்குடியேற்றம் புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சகவாழ்வு தேசிய கலந்துரையாடல் மற்றும் உத்தியோகபூர்வ மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இராஜாங்கக் கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
Average Rating