துறையூர் அருகே மாமனாரை கொடூரமாக கொன்ற மருமகன்..!!
திருச்சி மாவட்டம் தா. பேட்டை அருகே உள்ள கொத்தம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48), கொத்தனார். இவரது மகள் சரண்யா. மருமகன் வினோத். குடிப்பழக்கம் உள்ள சிவக்குமார் தினமும் குடித்து விட்டு வந்து அடிக்கடி குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல குடிபோதையில் வந்து அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மருமகன் வினோத் அதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் அரிவாளை எடுத்து மருமகன் வினோத்தை வெட்ட முயன்றுள்ளார். உடனே சுதாகரித்து கொண்ட வினோத் அரிவாளை பிடுங்கி சிவாக்குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் நிலை குலைந்த சிவக்குமார் மயங்கி விழுந்தார்.
அப்போது அருகில் கிடந்த அம்மிக்கல் குழவியை எடுத்து சிவக்குமாரின் தலையில் வினோத் போட்டார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சிவக்குமார் துடி, துடித்து இறந்தார். இதைத்தொடர்ந்து வினோத் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுபற்றி அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த சென்ற ஜம்புநாதபுரம் போலீசார் சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தி துறையூரில் பதுங்கி இருந்த வினோத்தை கைது செய்தனர். குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மாமனாரை மருமகன் வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating