கடலூரில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு..!!
கடலூர் வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி கல்யாணி (வயது 45). இவர் இன்று காலை பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்து மெயின் ரோட்டில் உள்ள கடை வீதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை பறித்தனர். சுதாரித்து கொண்ட கல்யாணி கொள்ளையர்களிடம் இருந்து போராடினார். ஆனாலும் பாதி செயின் கொள்ளையர்கள் கையிலும் மீதி பாதி செயின் கல்யாணி கையிலும் சிக்கி கொண்டது.
கையில் கிடைத்த வரை போதும் என்று கொள்ளையர்கள் பாதி செயினுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். உடனே கல்யாணி திருடன்… திருடன் என அலறினார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு அவரிடம் விசாரித்தனர்.
அப்போது நடந்த விவரத்தை கல்யாணி போலீசாரிடம் தெரிவித்தார். உடனே போலீசார் கொள்ளையர்களை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். எனினும் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.
போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலக்கினர். அப்போது கொள்ளையர்கள் வெள்ளை நிற மோட்டார் சைக்கிளில் வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating