ஒரேநாளில் 47 பேருக்கு மரண தண்டனை விதித்த சவுதி அரேபியாவுக்கு ஈரான் அதிபர் கடும் கண்டனம்…!!
சவுதி அரேபியாவில், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்த, ஷியா பிரிவு மதகுரு உட்பட, 47 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும், சவுதி தூதரகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஷியா பிரிவு தலைவர் உட்பட 47 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சவுதி அரேபியா அரசின் நடவடிக்கைக்கு ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சவுதி அரசு தன்னுடைய பெயரினை உலக நாடுகளில் மட்டுமல்லாமல் இஸ்லாமிய நாடுகள் மத்தியிலும் கெடுத்து கொண்டது என்றும் ஈரான் அதிபர் விமர்சித்துள்ளார்.
அதேவேளையில், சவுதி அரேபியா தூதரகம் மீதான ஈரான் மக்களின் தாக்குதலும் முற்றிலும் நீதியற்றது என்று அவர் கூறியுள்ளார். ஈரான் மக்கள் இதுபோன்ற முரட்டுத்தனமான நடவடிக்கையில் ஈடுபட கூடாது என்றும் சட்ட ரீதியான அணுகுமுறையை கையாள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Average Rating