பாபர் மசூதி தினம் தியேட்டர்களில் செல்போனில் பேச தடை
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 15வது ஆண்டு தினத்தையொட்டி தியேட்டர்களில் செல்போன்களில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் நெருங்கி வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் நெருக்கம் மிக்க பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தியேட்டர்களில் செல்போன்களில் பேச காவல்துறை தடை விதித்துள்ளது. டிசம்பர் 6ம் தேதி வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தியேட்டர்களுக்குப் படம் பார்க்கச் செல்வோர் செல்போன்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே கொண்டு சென்றாலும் தியேட்டருக்குள் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது, ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும். மேலும் தியேட்டர்களில் மெட்டர் டிடெக்டர் கருவிகள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும். படம் பார்ப்பவர்களை தியேட்டர் நிர்வாகங்கள் கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.