நைட் ஷிப்ட்-கேன்சர் வர அதிக வாய்ப்பு-எச்சரிக்கை ரிப்போர்ட்!!
இரவு நேர பணியில் ஈடுபடுவோருக்கு புற்று நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பிரிவுகளில் ஒன்றான சர்வதேச புற்று நோய் ஆய்வு ஏஜென்சி நடத்திய ஆய்வில் இந்த எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது. 10 நாடுளைச் சேர்ந்த 44 விஞ்ஞானிகள் கொண்ட குழு இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் நீண்ட நேரம் பணியாற்றுபவர்களின் உயிர்க்கடிகாரம் (பயோ கிளாக்) செயல்படுவது தடைபடுகிறது. இதை சரிவர செயல்பட வைக்கும் மெலட்டனின் வேதிப் பொருள் உற்பத்தி பாதிக்கப்படுவதால், பயோ கிளாக்கின் செயல்பாடு குழம்பிப் போய், புற்றுநோய்க்கு வழி வகுத்து விடுகிறதாம். இருப்பினும் இதுதொடர்பான ஆதாரங்கள் மிகக் குறைந்த அளவே தற்போது கிடைத்துள்ளதாக அந்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளன. இதுதவிர மரபியல் காரணங்களும், சுற்றுச்சூழல் காரணிகளும் கூட புற்றுநோய்க்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வை முதலில் விலங்குகளின் மீது விஞ்ஞானிகள் நடத்தினர். இரவு நேரங்களில் அந்த விலங்குகள் மீது ஒளியைப் பாய்ச்சி ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் அந்த விலங்குகளின் பயோ கிளாக் செயல்பாடு பாதிப்படையச் செய்யப்பட்டது. இந்த ஆய்வின் மூலம், உயிர்க்கடிகார செயல்பாடு பாதிக்கப்படுவதும், அதன் காரணமாக புற்றுநோய் உண்டாவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.