மரத்திலிருந்த பெண்ணை பறவை என எண்ணி துப்பாக்கியால் சுட்ட நபர் கைது…!!
மரமொன்றில் இலைகளை பறித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரை பறவை என எண்ணி துப்பாக்கியால் சுட்ட நபர் ஒருவரை துருக்கிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
65 வயதான எதெம் கெனன் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். இவர் அண்மையில் தனது நண்பர்கள் சகிதம் துப்பாக்கியுடன் கிளம்பினார்.
இதன்போது, மரமொன்றை நோக்கி அவர் இரு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். சில விநாடிகளில் பெண்ணொருவர் அலறியவாறு மரத்திலிருந்து வீழ்ந்தார்.
அப்போது, அப்பெண்ணை ஒரு பறவை என தான் எண்ணிவிட்டதாக மேற்படி நபர் கூறினாராம்.
உடனே எதெம் கெனன் அங்கிருந்து சென்றுவிட்டார். அதையடுத்து, அப்பெண்ணின் கணவர் கூக்குரலிட்ட நிலையில் அயலவர்கள் விரைந்துவந்தனர். பின்னர் பொலிஸாரால் எதெம் கெனன் கைது செய்யப்பட்டார்.
மேற்படி பெண் ஒலிவ் இலைகளை பறிப்பதற்காக மரத்தில் ஏறியிருந்தார். தலையிலும் வயிற்றிலும் காயமடைந்த அவர் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக டாக்டர் அஸ்கிம் டுஃபேக்கி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் தொலைக்காட்சியொன்றுக்கு அப்பெண் அளித்த செவ்வியில், “நான் ஒலிவ் இலைகளை பறித்துக்கொண்டிருந்தேன்.
திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அதன்பின் எனது தலையிலிருந்து இரத்தம் வடிந்தது.
நான் அலறியபோது, அங்கு வந்த நபர், “நீங்கள் ஒரு பறவை என நினைத்துவிட்டேன். நான் வேட்டையில் ஈடுபட்டுள்ளேன்” எனக் கூறினார்.
நான் உயிருடன் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி. மேற்படி நபர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
அவருக்கு எதிராக நான் முறைப்பாடு செய்வேன். என்னை எப்படி ஒரு பறவை என அவர் கருத முடியும்” எனத் தெரிவித்துள்ளார்
Average Rating