செல்போனை துப்பாக்கி என்று நினைத்து வாலிபர் சுட்டுக்கொலை: தொடரும் அமெரிக்க போலீசின் அட்டூழியம்…!!
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பல கருப்பின இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு “BlackLivesMatter” என்ற முழக்கத்துடன் உலகம் முழுவதிலும் இருந்து கண்டனக் குரல்கள் கிளம்பிய நிலையில் அண்மையில் நடந்துள்ள மற்றொரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கொலை முயற்சி உட்பட சட்டத்திற்கு புறம்பான பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் குற்றவாளி கேத் சில்ட்ரஸ் ஜூனியர்(23). இவரை அரிசோனா மாகாண அமெரிக்க போலீஸ் உயரதிகாரிகள் நீண்ட காலமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த வியாழன் அன்று மதியம் அவர் லாஸ் வேகாசில் இருப்பதைக் கண்டுபிடித்த அந்நகர போலீசார் அவரைக் கைது செய்ய முற்பட்டு அவரது வீட்டைச் சுற்றி வளைத்தனர். அப்போது தொலைவில் இருந்த அதிகாரிகள் அவரது கையை வான் நோக்கி உயர்த்த உத்தரவிட்டனர்.
திடீரென போலீசார் சுற்றி வளைத்ததால் திகைத்து நின்ற கேத்தின், வலது கையில் துப்பாக்கி இருப்பதைப் பார்த்த போலீசார் உடனடியாக அவரை சுட்டு வீழ்த்தினர். ஆனால், அருகில் சென்று பார்த்த போதுதான் அது அவரது செல்போன் என்று தெரியவந்தது. லாஸ் வேகாஸ் போலீசார் கடந்த வெள்ளி அன்று வெளியிட்ட அறிக்கையை அடுத்தே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், என் மகனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று போலீசாரால் கொல்லப்பட்ட கேத்தின் தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
Average Rating