இந்தியா-நேபாளம் இடையே 27 ஆண்டுக்கு பிறகு நட்பு பேருந்து சேவை தொடங்கியது…!!
இந்தியா-நேபாளம் நாடுகளுக்கிடையே 27 ஆண்டுகளுக்குப் பிறகு நட்பு பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.
நேபாள நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ளது பான்பசா நகரம். உத்தரகாண்ட் மாநிலம், சம்பாவாட் மாவட்டத்தில் உள்ள இந்த நகரின் வழியாக, நேபாள நாட்டின் காஞ்சன்பூர் நகரிலிருந்து புதுடெல்லிக்கு நட்பு ரீதியிலான பேருந்து இயக்கப்பட்டு வந்தது. அது 27 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்காக ஒருவார காலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டதை, இரு நாடுகளின் எல்லையையொட்டி வசிக்கும் மக்கள் வரவேற்றுள்ளனர். குடும்ப ரீதியாகவும், வணிக ரீதியாகவும் அவர்களுக்குள் உறவு இருந்து வருகிறது.
இந்த பேருந்து வசதியால், நேபாளத்தின் காஞ்சன்பூர், தண்டில் துரா, வோட்டி, சாபேன், அஷம், கலாலி, ஜாக்புத்தா மற்றும் சித்தார்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவர்.
குளிரூட்டப்பட்ட வசதியுடைய அந்த பேருந்துகள் காஞ்சன்பூருக்கு தினமும் அதிகாலை 6 மணிக்கு செல்லும். அங்கிருந்து மாலை 6 மணிக்கு டெல்லிக்கு புறப்படும்.
இந்த பேருந்தில் பயணம் செய்வதற்கு எவ்வித சிறப்பு ஆவணங்களும் வழங்கத் தேவை இல்லை. பயணிகளுக்கு வை-ஃபை இணைப்பு மற்றும் ஒருபாட்டில் மினரல் வாட்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.
Average Rating