பெரம்பலூர் அருகே 4 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை…!!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பகளவாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 35). இவரது மனைவி மல்லிகா (23). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது விஷால் (6), பிரகாஷ் (5), லெட்சுமி (4) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். கல்லுடைக்கும் தொழிலாளியான அண்ணாதுரை கடந்த சில மாதங்களாக ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இதனால் உறவினர்கள் ஊரான பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் மல்லிகா தனது மூன்று குழந்தைகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். நேற்று காலை முதல் லட்சுமியை திடீரென காணவில்லை.
வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தவர் மாயமானர். அருகில் உள்ள வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மல்லிகா தேடினார். ஆனால் சிறுமி லட்சுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மல்லிகா மற்றும் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் விவசாயி ஒருவரது சோளக்காட்டில் சிறுமி லெட்சுமி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் டி.எஸ்.பி. கார்த்திக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து சிறுமி லெட்சுமி எதற்காக, எப்படி, யாரால் கொலை செய்யப்பட்டார் என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
4 வயது சிறுமி கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating