வடசேரியில் வாலிபர் காதலிக்க மறுத்ததால் தீக்குளித்த இளம்பெண்…!!
நாகர்கோவில் வடசேரியை அடுத்த பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மகள் சோனாலி (வயது 18). இடைநிலை கல்வி மட்டுமே படித்துள்ள இவர் அதன்பின்பு பள்ளிக்கு செல்லாமல் பெற்றோருக்கு துணையாக வீட்டிலேயே இருந்து வந்தார். அப்போது கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சோனாலிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சோனாலி, அந்த வாலிபருடன் பேசிக்கொண்டிருந்த போது அவரை காதலிப்பதாக கூறியதாக தெரிகிறது. இதற்கு பதில் சொல்லாத அந்த வாலிபர் பின்னர் பேசுகிறேன் எனக்கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
நேற்றும் சோனாலி அந்த வாலிபரிடம் பேசினார். பின்னர் அவர் சோகத்துடன் காணப்பட்டார். இரவானதும் சோனாலி திடீரென வீட்டின் குளியல் அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து சோனாலியின் அலறல் சத்தம் கேட்டது. பதறிபோன பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடி சென்று பார்த்தனர்.
அங்கு குளியலறையில் சோனாலி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டனர். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி வடசேரி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர்.
இதில் சோனாலியுடன் பேசிய வாலிபர் அவரை பிடிக்கவில்லை என கூறியதும் இதனால் மனம் உடைந்தே சோனாலி தீக்குளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாஜிஸ்திரேட்டு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று சோனாலியிடம் வாக்குமூலம் பெற்றார். மேலும் சோனாலியை காதலிக்க மறுத்து அவரை தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் யார் என கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
Average Rating