கொளத்தூர் அருகே குறி சொல்லும் சாமியாரை அடித்து உதைத்த 11 பேர் கைது…!!
கொளத்தூர் அருகே உள்ள ஏழரைமத்திகாடு காந்திநகரை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 27). இவர் குறி சொல்லும் சாமியாராக இருந்து வருகிறார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குருவரெட்டியூரை சேர்ந்த கார்த்தி(வயது 24) முத்துசாமியிடம் வாக்கு கேட்க வந்தார். வந்தவர் வீடு திரும்பாமல் சாமியார் முத்துசாமியுடன் நிரந்தரமாக தங்கிவிட்டார். சம்பவதன்று உறவினர்கள் அங்கு வந்து, கார்த்தியை விடுவிக்குமாறு முத்துசாமியிடம் கூறினர். அப்போது, வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் முத்துசாமியை சரமாரியாக அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்தியின் உறவினர்கள் ஹரிகரநாராயணன், கணேசன், பிரகாஷ், குப்புசாமி, குணசேகரன், ஜெயபால், சதீஷ்குமார், சம்பத், சேட்டு, லட்சுமணன், சக்திவேல் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.
சாமியார் முத்துசாமியை பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய விபரம்:–
சாமியார் முத்துசாமியின் அத்தை மகன் தான் கார்த்தி. தற்போது அவரது அத்தை ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் கார்த்தி தனது தாயாருடன் சண்டை போட்டுக்கொண்டு, குறி சொல்லும் சாமியார் முத்துசாமியின் வீட்டிற்கு வந்து விட்டார். அதன் பிறகு அவர் திரும்ப வீட்டிற்கு செல்லவில்லை.
இதை தொடர்ந்து தாயார் மற்றும் உறவினர்கள் பல தடவை வீட்டிற்கு வருமாறு அழைத்து பார்த்தனர். ஆனால் அவர் வரவில்லை.
மேலும், தாயார் கண்ணீர் விட்டு கதறி அழுத பிறகும் அவர் அங்கிருந்து வராததால் உறவினர்கள் கொளத்தூர் அருகே உள்ள ஏழரைமத்திகாடு காந்திநகரில் வசித்து வரும் சாமியார் முத்துசாமியின் வீட்டுக்கு சென்று உள்ளனர். அப்போது, அங்கிருந்த கார்த்தியை பார்த்ததும் திரும்ப வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
அவர்கள் எவ்வளவோ அழைத்து பார்த்தும் வரமாட்டேன் என்று கார்த்தி திட்டவட்டமாக கூறியதால் அருகில் நின்று கொண்டிருந்த முத்துச்சாமியிடம் இதற்கெல்லாம் நீதான் காரணம் என்று கூறி அவரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குறி சொல்லும் சாமியாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் எல்லா விதமான குறிகளும் சொல்வதால், அக்கம் பக்கத்தினர் அவரிடம் குறி கேட்பார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating