கணவனால் கொளுத்தப்பட்ட துணை நடிகை-உயிருக்கு போராட்டம்
குடிப்பதற்கு பணம் தர மறுத்த துணை நடிகைக்கு அவரது கணவர் தீ வைத்தார். அந்த நடிகை உயிருக்கு போராடி வருகிறார். சென்னை யானை கவுனி ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் நடராஜ் (33). இவரது மனைவி மாலதி (30) துணை நடிகையாக சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். வேலையேதும் இல்லாத நடராஜுக்கு குடிப் பழக்கம் உண்டு. இதனால் மாலதி தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நடராஜ் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி மாலதியை அடித்து, உதைத்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இந் நிலையில் நடராஜ் மது அருந்த பணம் கேட்டுள்ளார். மாலதி கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நடராஜ் மாலதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டார். உடலில் எரிந்த தீயுடன் மாலதி தெருவுக்கு ஓடி வந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து மாலதியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் உடலில் பெரும்பாலான பகுதிகள் எரிந்த நிலையில் தற்போது மாலதி உயிருக்கு போராடி வருகிறார். நடராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.