பழிக்குப் பழி நடவடிக்கை: வங்காளதேச பெண் தூதரை வெளியேறும்படி பாகிஸ்தான் உத்தரவு..!!
வங்காளதேசத்தில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் நாட்டின் தூதர் பரீனா அர்ஷத்துக்கு, ஜமாத் அல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரை வங்காளதேச அரசு கடந்த மாதம் திருப்பி அனுப்பியது.
இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டிற்காக முன்னதாக மற்றொரு தூதரையும் வெளியேற்றியது. இந்த சம்பவங்களையடுத்து வங்காளதேசத்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தூதரக உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்காளதேச அரசின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் அரசு வங்காளதேச பெண் தூதரை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.
வங்காளதேச தூதரகத்தில் பணியாற்றி வரும் பெண் அதிகாரியான மோஷூமி ரஹ்மானை இஸ்லாமாபாத்தில் இருந்து நாளைக்குள் வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், அவர் தூதரக விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை தங்கள் முகத்தை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கை போன்று தெரிவதாக வங்காளதேச வெளியுறவுத்துறை இணை மந்திரி விமர்சித்துள்ளார். மேலும், தங்கள் நாட்டு தூதரை வெளியேற்றுவதற்கான காரணத்தை அவர்களால் விளக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Average Rating