யால காட்டினுள் படையினர் புலிகள் மோதல்
யால சரணாலயப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இராணுவ கொமாண்டோ படையணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதலொன்று இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவும் இச் சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன் சம்பவத்தில் 4 புலிகளும் கொமாண்டோ படையணியைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இரு தரப்பினருக்குமிடையில் மூண்ட மோதலின்போது காயமடைந்த சக வீரரை தூக்கிக்கொண்டு கொமாண்டோ படையணிகள் திரும்பிவிட்டதாகவும் அதன் பின்னர் மீண்டுமொரு படையணியொன்று அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிரிகேடியர் நாணயக்கார கூறினார். காயமடைந்தவர் பின்னர் ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார். இதேநேரம், யால வனப் பிரதேசத்திற்குள் தல்கஸ்மங்கட இராணுவ நிலை மீது புலிகள் கடந்த மாதம் தாக்குதல் நடத்திய பின்னர் விடுதலைப் புலிகளை யால பகுதிக்குள் இராணுவத்தினர் சந்தித்த முதல் தருணம் இதுவென்றும் உதய நாணயக்கார தெரிவித்தார்.படையினர் யால பிரதேசத்திற்குள் தேடுதலில் ஈடுபட்டிருந்தபோதே இந்த மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.