இலங்கைத்தலைநகர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலிருந்து சிங்களர்களை விடுதலைப்புலிகள் தங்கள் படையில் சேர்த்து வருவதாக தகவல்கள்
இலங்கைத்தலைநகர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலிருந்து சிங்களர்களை விடுதலைப்புலிகள் தங்கள் படையில் சேர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே உள்ள போர் நிறுத்தத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விடுதலைப்புலிகள் கொழும்புவுக்குள் ஊடுருவி சிங்களர்களை தங்களது படையில் சேர்த்து வருவதாக தி டெய்லி நியூஸ் நாளேடு தெரிவித்துள்ளது. இவ்வாறு படையில் சேர்க்கப்படும் சிங்களர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ராணுவத்தை குறி வைத்து நடத்தப்படும் மனித வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அந்த நாளேடு கூறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கள புலிகள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதை அந்த நாளேடு தனது தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களில் புலிகள் பின்னடைவை சந்திக்கும்போதெல்லாம் விடுதலைப்புலிகள் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும், அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இதுபோல் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக அது கூறியுள்ளது. இந்த நிலைமை போலீசாருக்கும் பாதுகாப்பு பணியினருக்கும் சவாலாக அமைந்துள்ளது என்றும் தி டெய்லி நியூஸ் நாளேடு தெரிவிக்கிறது.