கணவனுக்கு அடி உதை , மனைவியை போலீசார் கைது
ஒழுக்கமாக வாழ் என்று அறிவுரை கூறிய கணவனை அடியாட்களை வைத்து கொலை செய்ய முயன்றதாக அவரின் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். அடியாட்களை வலைவீசி தேடி வருகின்றனர். உள்ளகரம் பொன்னப்பன் தெருவில் வசிப்பவர் தேவராஜ் (வயது 45). இவரது மனைவி சுடர்கொடி (வயது 34). இவர்களுக்கு இரண்டு வயதில் ஜெயசூர்யா என்ற குழந்தை உள்ளது. தேவராஜுக்கும், சுடர்கொடிக்கும் அடிக்கடி குடும்பத்தில் தகராறு நடைபெற்று வந்ததாக சொல்லப் படுகிறது. இதனால் தேவராஜும், சுடர்கொடியும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் தேவராஜ், பல் மருத்துவரை பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஒன்று தேவராஜ் மீது மோதுவதுபோல் வேகமாக வந்துள்ளது. இதைக்கண்ட தேவராஜ் பயந்துபோய் சாலையோரம் ஒதுங்கி உள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்த 3 மர்ம ஆசாமிகள், தங்கள் கையில் வைத்திருந்த பட்டாக் கத்தியால் தேவராஜை சரமாரியாக வெட்டியதாக சொல்லப் படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் தேவராஜ் கீழே விழுந்தார். இதை பார்த்த பொது மக்கள் ஓடி வந்து மர்ம ஆசாமிகளை பிடிக்க முயற்சித்தனர். அவர்கள் உடனடியாக ஆட்டோவில் ஏறி தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து மடிப்பாக்கம் சப்இன்ஸ்பெக்டர் குமரய்யா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தேவராஜின் மனைவி சுடர்கொடியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது நடத்தையை தட்டி கேட்டதாலேயே தேவராஜை அடியாட்களை வைத்து கொலை செய்ய முயன்றதாக போலீசிடம் சுடர்கொடி வாக்கு மூலம் அளித்தார். இதனைத்தொடர்ந்து சுடர்கொடியை போலீசார் கைது செய்தனர். தேவராஜை கொலை செய்ய முயன்ற அடியாட்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.