பள்ளி மாணவி தீக்குளிப்பு
படிக்க விரும்பிய மாணவிக்கு திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்ததால் மனம் உடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். காஞ்சிபுரம் அருகே வேலிங்கப் பட்டறை காமராஜர் நகரில் வசிப்பவர் வெங்கடேசன். விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகள் பெயர் குப்பு (வயது 18). காஞ்சிபுரத்தில் உள்ள அரசினர் பெண்கள் பள்ளியில் படித்து வந்தார். வெங்கடேசனின் மைத்துனருக்கு குப்புவை திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குப்பு, தொடர்ந்து படிக்க விரும்புவதாக கூறினார். ஆனால், இதனை அவருடைய பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் மனம் உடைந்த குப்பு நேற்று தனது வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் ஏற்பட்ட வேதனை காரணமாக குப்பு அலறினார். உடனடியாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து குப்புவை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே குப்பு உயிரிழந்தார்.