அமெரிக்காவில் ஐ.எஸ். அமைப்பின் பெயரில் போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட ஆசாமி கைது…!!
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரில் போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெஸ்சி ஹார்ட்னெட் (33) என்ற அந்த போலீஸ் அதிகாரி நேற்று முன்தினம் இரவில் ரோந்து வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சிக்னல் அருகே மெதுவாக அவர் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த ஒரு ஆசாமி, போலீஸ் அதிகாரி ஜெஸ்சியை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தபோதும், அந்த நபரை விரட்டிச் சென்றார். பின்னர், போலீஸ் அதிகாரிகள் அந்த நபரை கைது செய்தனர்.
நீண்ட வெள்ளை நிற அங்கி அணிந்து வந்த அந்த நபர் துப்பாக்கியால் சுட்ட காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை நேற்று வெளியிட்ட போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த எட்வர்டு ஆர்ச்சர் (30) என்பவரை கைது செய்திருப்பதாகவும் தாக்குதல் நடத்தியதை அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தனர். மேலும், தன்னை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அனுதாபி என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால், அவர் இஸ்லாத்தை பின்பற்றுபவர் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆர்ச்சர் ஏற்கனவே குற்றச்செயலில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது. 2014ம் ஆண்டு உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் கைது செய்யப்பட்டு 9 முதல் 23 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating