வள்ளியூர் அருகே நிகழ்ந்த விபத்தில் மகன், மகள் பலியானதை அறியாத குஜராத் பெண்: கணவர் கண்ணீர்…!!
வள்ளியூர் அருகே நடந்த பஸ் விபத்தில் 9 பேர் இறந்தனர். இவர்களில் குஜராத்தைச் சேர்ந்த ஆஞ்சிலோ (வயது 26), அவரது தங்கை அஞ்சலி (19) ஆகியோரும் பலியானார்கள். இவர்கள் தங்கள் பெற்றோரான விக்டர் (56), மோனிஷா (46) ஆகியோருடன் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு கன்னியாகுமரியை பார்க்க பஸ்சில் வந்தனர். விபத்தில் சிக்கிக்கொண்டனர்.
விக்டர், மோனிஷா ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர். மகன், மகள் இறந்ததை கேட்டு விக்டர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். குழந்தைகள் இறந்ததை தனது மனைவியிடம் தெரிவிக்க வேண்டாம், அவரால் தாங்கிகொள்ள முடியாது, குஜராத்துக்கு சென்ற பிறகு பக்குவமாக அதை தெரிவிக்கிறேன் என ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கூறி கண்ணீர் வடித்தார்.
இன்று மனைவியை காரிலும், மகள், மகன் உடல்களை ஆம்புலன்சிலும் கொண்டு செல்ல அவர் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
இதற்கிடையே நேற்று இரவு போக்குவரத்து அமைச்சர் தங்கமணி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களையும் அவர் பார்த்தார். அவருடன் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., ஆஸ்பத்திரி டீன் வடிவேல் முருகன், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரஜினிகாந்த், முருகன், அ.தி.மு.க. நகர செயலாளர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
விபத்தில் சிக்கி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 26 பேரில் 12 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆனார்கள். தற்போது 14 பேர் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். பலியான 9 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நேற்றே 7 பேர் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Average Rating