கைதான 31 இந்தியர்களுக்கு ஜாமீன் மறுப்பு
மலேசிய அரசால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 31 இந்தியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்து விட்டது. இதுதொடர்பான வழக்கு கோலாலம்பூர் ஷா அஸ்லாம் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஜிமா உமர் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் இறுதியில் தனது 20 நிமிட தீர்ப்பை வழங்கிய அவர், குற்றம்சாட்டப்பட்டவர்களின் நலனுக்கு முன்பாக பொதுமக்களின் நலனே முக்கியம் என்று கூறி, ஜாமீனை நிராகரித்தார். குற்றம்சாட்டப்பட்ட சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாமீன் அளிக்க வேண்டும் என்ற எதிர்தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, இதற்கான போதிய ஆதாரங்கள் எதையும் சம்மந்தப்பட்டவர்கள் தாக்கல் செய்யவில்லை என்றார். தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள 31 இந்தியர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வரை அவர்கள் எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நவம்பர் 25ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வம்சாவளியினர் பேரணி நடத்தினர். தடையை மீறி நடந்த பேரணியை கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்தனர். இதில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் காயமடைந்தனர். பேரணி நடத்தியபோது காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தியதாக, 31 இந்தியர்கள் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.