கன்னியாகுமரி அருகே 5 மாத ஆண் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை: தந்தை உள்பட 4 பேர் கைது…!!
அகஸ்தீஸ்வரம் கீழச்சாலையைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 42). இவரது மனைவி அமலா (37). இவர்களுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை.
கடந்த 31–ந் தேதி வரதராஜன், 5 மாத ஆண் குழந்தை ஒன்றுடன் வீட்டுக்கு வந்தார். அந்த குழந்தையை தத்தெடுத்து வந்திருப்பதாக அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். போதிய உணவு கிடைக்காமலும், சரியாக பராமரிக்காததாலும் அந்த குழந்தை 2 நாட்களாக தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சந்தேகம் கொண்டு நாகர்கோவிலில் உள்ள குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உதவி மைய அதிகாரி மேரி பெனி நேரில் சென்று விசாரித்தார்.
வரதராஜன் அந்த குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு பேரம் பேசி வாங்கி வந்தது தெரியவந்தது. அந்த குழந்தை கொட்டாரம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (23)– மாரிமணி மாலா (21) தம்பதியினருக்கு சொந்தமானது ஆகும். இவர்களுக்கு சூர்யா (1½) மற்றும் நிதிஷ்குமார் என்ற 5 மாத குழந்தையும் இருந்தனர்.
சதீஷ்குமார் கட்டிட சென்டிரிங் வேலை பார்த்து வந்தார். இதில் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டார். அவரது வறுமையை பயன்படுத்தி புரோக்கர் கும்பல் சதீஷ்குமாரை சந்தித்து பண ஆசை காட்டி உள்ளனர். உனக்கு தான் ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளதே, 2–வது குழந்தை நிதிஷ்குமாரை விற்று விடு, உனக்கு ரூ.1 லட்சம் வாங்கி தருகிறோம் என கூறி இருக்கிறார்கள்.
பண ஆசையில் சதீஷ்குமாரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி வரதராஜன், ரூ. 1 லட்சம் கொடுத்து குழந்தை நிதிஷ்குமாரை வாங்கியது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைகள் உதவி மைய அதிகாரி மேரிபெனி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் குழந்தையை விற்ற சதீஷ்குமார், அதனை வாங்கிய வரதராஜன், இதற்கு உதவியாக இருந்த அவரது உறவினர் சரவணந்தேரியைச் சேர்ந்த தங்கநாடார் (66), லட்சுமிபுரத்தைச் சேர்ந்த புரோக்கர் ஆதிலிங்கம் (37), அவரது மனைவி விமலா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில் சதீஷ்குமார், வரதராஜன், தங்கநாடார், விமலா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆதிலிங்கம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
Average Rating