வீட்டை விட்டு ஓடிய வாலிபரை 21 ஆண்டுக்கு பிறகு பெற்றோருடன் இணைத்த பேஸ்புக்…!!
இளைஞர்கள் பலர் எப்போதும் செல்போனில் முகம் புதைத்து ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ்அப்’ என தேடி தேடி குடும்ப அங்கத்தினர்களிடம் தனிமைபட்டு போகிறார்கள்.
இந்த நிலையில் சிறுவயதில் குடும்பத்தில் இருந்து பிரிந்த வாலிபன், 21 ஆண்டுகளுக்கு பிறகு ‘பேஸ்புக்’ மூலம் பெற்றோருடன் இணைந்த சம்பவம் ஆந்திராவில் நடந்து உள்ளது.
அந்த வாலிபரின் பெயர் அமர்நாத் ரெட்டி. கடப்பா மாவட்டம் சொலே பள்ளியைச் சேர்ந்த சேகர் ரெட்டி– வெங்கடலட்சுமி தம்பதியரின் மகன். இந்த தம்பதிகளுக்கு ராஜரெட்டி, நந்தகுமார் ரெட்டி என்ற மேலும் 2 மகன்களும் உள்ளனர்.
அமர்நாத் ரெட்டிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதில் இருந்தே வெறியாக இருந்தது. சினிமா ஆசையில் கடந்த 1994–ம் ஆண்டு அக்டோபர் 15–ந்தேதி வீட்டை விட்டு ஓடினார்.
ஐதராபாத் சென்ற அவர் பெரும் போராட்டத்துக்கு பின்னர் சினிமாவில் சேர்ந்தார்.
பல படங்களில் வில்லனாக நடித்தார். சில டி.வி. தொடர்களிலும் நடித்து உள்ளார்.
இதற்கிடையே மகனை இழந்த சேகர்ரெட்டி தம்பதிகள் அவனை பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியாமல் அவனை நினைத்து பெற்றோர்கள் அழுத வண்ணம் இருந்தனர். அதோடு வியாபார விஷயமாக அவர்கள் குடும்பத்தினர் கடப்பாவை காலி செய்து அனந்தபுரத்தில் குடியேறினர். மாயமான மகன் சினிமாவில் நடிப்பது அவர்களுக்கு தெரியாது. மகன் கிடைக்க மாட்டான் என்ற நினைப்பில் கவலையுடன் காலம் கடந்தது.
இந்த நிலையில் சேகர் ரெட்டியின் தம்பி அங்கிரெட்டியின் மகன் ஹரியரெட்டியின் பேஸ்புக் மூலம் அமர்நாத் ரெட்டி நண்பரானார். பேஸ்புக்கில் அவர்கள் அடிக்கடி பேசி வந்தனர்.
அப்போது ஹரிஸ்ரெட்டி தனது குடும்ப விவரத்தை தெரிவித்தார். அப்போது தான் அமர்நாத் ரெட்டிக்கு ஹரிஸ்ரெட்டி சகோதரர் முறை என தெரியவந்தது.
சினிமாவில் நடிக்க தொடங்கியது, தனது பெற்றோரை தேடி முயன்றதும், அவர்கள் ஊரை காலி செய்து விட்டு சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அமர்நாத் கூறினார்.
‘பேஸ்புக்’ மூலம் பெற்றோரை கண்டுபிடித்த அமர்நாத் ரெட்டி 21 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை சந்திக்க அனந்தபுரம் வந்தார்.
மகனை கிடைத்ததில் சேகர்ரெட்டி மற்றும் அவரது மனைவி வெங்கடலட்சுமி மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
மகன் வருகையை பட்டாசு வெடித்தும், பலூன் பறக்க விட்டும், கேக் வெட்டியும் கொண்டாடினார்கள். மகனுக்கு வெங்கடலட்சுமி கேக் ஊட்டினார்.
இந்த ஆண்டுதான் எங்களுக்கு உண்மையான சங்கராந்தி என வெங்கடலட்சுமி கண்ணீர் மல்க கூறினார்.
Average Rating