முகத்தில் புற்றுநோய் கட்டியுடன் அவதிப்படும் செங்கல் சூளை தொழிலாளி மகன்…!!
நாமக்கல் மாவட்டம் பாப்பம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45). இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு தேவி (9), சரசு (5) என்ற 2 மகள்களும், ராஜ்குமார் (4) என்ற மகனும் உள்ளனர்.
சுப்பிரமணியனும், விஜயாவும் அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 8 மாதத்துக்கு முன்பு சிறுவன் ராஜ்குமாருக்கு, மூக்கில் ஒரு சிறிய கட்டி போல் வந்தது.
இதனால் ராஜ்குமாரை அவனது பெற்றோர் ஈரோட்டில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் கட்டி குணமாகவில்லை.
பின்னர் நாட்கள் செல்ல…செல்ல… சிறுவன் ராஜ்குமாருக்கு முகத்தில் இருந்த கட்டி பெரிதாகி கொண்டே சென்றது. இதனால் அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது ராஜ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், முகத்தில் இருப்பது புற்றுநோய் கட்டி என்று தெரிவித்தனர்.
இந்த புற்றுநோய் கட்டிக்கு கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த கட்டியை அகற்ற சுமார் 4 லட்சத்துக்கு மேல் செலவாகும் என்று கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி வேதனையுடன் இருந்து வருகிறார்.
செங்கல் சூளையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து மகனுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது? என்று தவித்து வருகிறார். கிடைக்கும் வருமானத்தில் குழந்தைகளை காப்பாற்றுவதே மிகவும் சிரமமாக உள்ளது. இவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது? என்று கவலையுடன் இருந்து உள்ளார்.
எனவே சிறுவன் ராஜ்குமாருக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு கருணை உள்ளம் கொண்ட தொண்டு நிறுவனங்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வலர்கள் உதவ முன் வர வேண்டும் என்று அவனது பெற்றோர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Average Rating