எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் பனிமனிதனின் காலடித்தடம் கண்டுபிடிப்பு
எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் `எடி’ என அழைக்கப்படும் பனிமனிதனின் காலடித் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது உண்மையில் பனிமனிதன் இருக்கின்றானா என்ற ஆய்வுக்கு உயிரூட்டியுள்ளது. இமயமலைப் பகுதியில் பாதி மனிதனாகவும் பாதி குரங்காகவும் விளங்கும் `எடி’ என்ற பிரமாண்டமான பனிமனிதன் உள்ளதாக பல ஆண்டுகளாகக் கூறப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் `சை-பி’ என்ற தொலைக்காட்சிச் சேவையின் 23 ஊழியர்கள் நேபாளத்தில் சொலுகூம்பு மாவட்டத்தில் ஒரு வாரம் தங்கி ஆய்வில் ஈடுபட்டனர். இந்த இடம் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. 2,850 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் மஞ்சு என்ற ஆறு உள்ளது. இந்த ஆற்றங்கரையிலேயே இரண்டு வலதுகால் தடங்களையும் ஒரு இடது கால் தடத்தினையும் கண்டுபிடித்துள்ளதுடன் 30 அங்குல நீளமுடைய இக்கால்களில் ஐந்து விரல்களின் தடங்களும் தெளிவாகக் காணப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் அவ்வூழியர்களில் ஒருவர் தெரிவிக்கையில், பனிமனிதன் குறித்து அலெக்சாண்டர் காலத்திலிருந்தே தகவல்க வெளிவந்து கொண்டிருந்தாலும் அதுகுறித்து நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கவில்லை. ஆனாலும் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டும் முற்றுமுழுதாக பனிமனிதன் உள்ளானெனக் கூறிவிடமுடியாது. அதற்கு மரபணுப் பரிசோதனையோ அல்லது எடியின் புகைப்படமோ வேண்டும். ஆனால், அந்த வழித்தடத்தில் வேறு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, அத்துடன், அது கரடியின் காலடி என்பதனையும் ஏற்க முடியவில்லையெனத் தெரிவித்தார்.