ஜெயிலரின் தலையை துண்டித்து விடுவோம்: டிஐஜி எஸ்ராவிடம் மிரட்டல் விடுத்த கைதிகள்
சேலம் மத்திய சிறையில் சோதனை செய்ய வந்த சிறைத்துறை டிஐஜி எஸ்ராவிடம், ஜெயிலரின் தலையை துண்டித்து விடுவோம் என்று கைதிகள் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகளிடம் செல்போன், கஞ்சா உட்பட சட்டவிரோதமான பொருட்கள் இருப்பதாக வந்த தகவலையடுத்து எல்லா மத்திய சிறைகளிலும் சோதனை நடந்து வருகிறது. அதன்பேரில் சேலம் மத்திய சிறையில் சிறைத்துறை கோவை சரக டிஐஜி எஸ்ரா தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர். தென்காசியில் நடந்த தொடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 முஸ்லிம்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று டிஐஜி எஸ்ரா சோதனை நடத்தினார். அப்போது அந்த கைதிகள் அவரிடம், தங்களை பாளையங்கோட்டை அல்லது மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோமே. ஏன் இன்னும் மாற்றவில்லை. எங்களுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸ்கர் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியும், சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இந்த சிறையில் உள்ள ஜெயிலர் கருப்பண்ணன் எங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே அவருடைய தலையை நாங்கள் துண்டிப்போம். எங்களுக்கு எல்லா சிறையிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கைதிகளின் மிரட்டலை கேட்ட சிறைத்துறை டிஐஜி எஸ்ரா அதிர்ச்சியடைந்தார். பின்னர் கைதிகளை சமாதானம் செய்தார். உங்களை வேறு சிறைக்கு மாற்றுவது எங்களால் முடியாது. அது தொடர்பாக நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும் என்று கூறியுள்ளார். கைதிகள் மிரட்டல் குறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,
மிரட்டல் குறித்து சிறைத்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். மேலும் மிரட்டல் விடுத்த கைதிகள் மீது சிறை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.