காதலித்து கம்பி நீட்டியவருக்கு ‘காப்பு’!
நாமக்கல்லில் அப்பாவி பெண் ஒருவரை காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு கம்பி நீட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ராஜாமணி. இவர் நாமக்கல்லில் உள்ள பிரபல கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் நீலகிரி மாவட்டம் உழிக்கல்லலை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்ற வாலிபரும் வேலை செய்து வந்தார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. விழிகள் காதல் மொழி பேச, விரல்கள் கவிதை பாட, இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். இதை அறிந்த அந்த கூரியர் நிறுவனம் இருவரையும் வேலையை விட்டு நீக்கி விட்டது. இதனால் ராஜாமணியை பிரிய மனம் இல்லாத ஈஸ்வரமூர்த்தி நாமக்கல்லில் தனி வீடு எடுத்து அவரை தங்க வைத்து கணவன் மனைவி போல குடும்பம் நடத்தி வந்தார். இதனால் ராஜாமணி கர்ப்பம் ஆனார். நாட்கள் நகர்ந்த நிலையில், முறைப்படி தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு ஈஸ்வரமூர்த்தியை வற்புறுத்தினார் ராஜாமணி. முதலில் சம்மதம் தெரிவித்த ஈஸ்வரமூர்த்தி கடைசியில் மறுத்துவிட்டாராம். இதனால் ராஜாமணி நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு கம்பி நீட்ட முயன்ற ஈஸ்வரமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.