ஆசிய உள்கட்டமைப்பு வங்கி சீனாவில் இன்று திறக்கப்பட்டது…!!
இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் அங்கம்வகிக்கும் ஆசிய உள்கட்டமைப்பு வங்கியை சீனத் தலைநகர் பீஜிங்கில் அந்நாட்டின் அதிபர் க்ஸி ஜிங்பிங் இன்று திறந்து வைத்தார்.
சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிறுவன உறுப்பினர்கள் பட்டியலில் இந்தியா மற்றும் செல்வாக்கு மிகுந்த மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தில் இருக்கும் உலக வங்கிக்கு போட்டியாக சீனாவின் ஆதரவுடன் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. ஆசிய பகுதியில் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உதவி செய்யும் வகையில் இவ்வங்கி உருவாக்கப்படுகிறது.
சீனா, இந்தியா, நேபாளம், இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு, பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பிரேசில், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் என மொத்தம் 57 நாடுகள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் ஜப்பானும் இந்த வங்கியில் இணையாமல் ஒதுங்கியபோதும், தங்கள் ஒத்துழைப்பை அளிப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
100 பில்லியன் அமெரிக்க டாலர் மூலதனத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய வங்கியில் சீனாவுக்கு 30.34 சதவீதம் மூலதனமும், இந்தியாவுக்கு 8.52 சதவீதம் மூலதனமும், ரஷியாவுக்கு 6.66 சதவீதம் மூலதனமும் உள்ளது. இதரநாடுகள்ம் தங்களது பங்களிப்பாக ஒருதொகையை மூலதனமாக செலுத்தியுள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மூலதனத்தை போட்டுள்ள இந்தியா இந்த வங்கியின் துணை தலைமையாக இருக்கும்.
ஆசிய நாடுகளில் எரிசக்தி, போக்குவரத்து மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக்கு நிதி வழங்கும் நிறுவனமாக செயல்படவுள்ள இந்த வங்கியின் முதல் தலைவராக சீனாவின் முன்னாள் நிதி மந்திரி ஜின் லிகுன் பொறுப்பேற்றுள்ளார். சீனத் தலைநகர் பீஜிங்கில் இன்று நடைபெற்ற விழாவில் அந்நாட்டின் அதிபர் க்ஸி ஜிங்பிங் ஆசிய உள்கட்டமைப்பு வங்கியை முறைப்படி திறந்து வைத்தார்.
Average Rating