காவேரி – வைத்தி: சமரசம் ஏற்படவில்லை!
நடிகை காவேரி மற்றும் ஒளிப்பதிவாளர் வைத்திக்கும் இடையே நடந்த சமரச ஆலோசனைக் கூட்டத்தில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து வருகிற 19ம் தேதி மீண்டும் சமரசம் பேச வருமாறு இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனது கணவர் வைத்தி, தனது மாமன் மகளை கீரனூரில் வைத்து கல்யாணம் செய்யப் போகிறார். அதைத் தடுத்து அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று நடிகை காவேரி சமீபத்தில் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து கீரனூர் விரைந்த போலீஸார் கல்யாணத்தை நடத்த விடாமல் தடுத்து விட்டனர். கல்யாணம் நின்றதைத் தொடர்ந்து வைத்தி தலைமறைவாகி விட்டார். முன்ஜாமீன் கோரி வைத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி, இருவரையும் சமரச மையத்தை அணுகி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த 30ம் தேதி இருவரும் சமரச மையத்தில் ஆஜரானார்கள். அங்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இருவருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து 6ம் தேதி வருமாறு இருவரும் அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி நேற்றும் இருவரும் மாலை ஆஜரானார்கள். அப்போது முதலில் தனித் தனியாகவும், பின்னர் இருவரையும் ஒன்றாக அமர வைத்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வருகிற 19ம் தேதி மீண்டும் இருவரும் வறுமாறும், அப்போது இறுதி முயற்சியாக சமரசப் பேச்சு நடத்தப்படும் எனவும் சமரசத் தீர்வு மையம் தெரிவித்துள்ளது.