மீசாலையில் கிளெமோர் தாக்குதல்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை பகுதியில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நேற்று காலை 9 மணியளவில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 2 இராணுவத்தினர் காயமடைந்து பலாலி இராணுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் கோப்பாய் இராசவீதியிலும், புத்தூர் பகுதியிலும் நேற்றிரவு இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராசவீதியில் மோட்டார் சைக்கிளில் வந்ததாகத் தெரிவிக்கப்படும் ஆயதபாணிகளினால் நீர்வேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க முகாமையாளராகிய 27 வயதுடைய சின்னத்தம்பி தர்மராஜா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தூர் பகுதியில் தமது வீட்டிலிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்ததாகத் தெரிவிக்கப்படும் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகள், 65 வயதுடைய வல்லி கிட்டிணன் என்பவரை வீட்டிற்கு வெளியில் வருமாறு அழைத்து, அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் நேற்று மாலை 7.15 மணியளவில் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.