தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரரை தாக்கி நகை கொள்ளை
மதுரையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரரை தாக்கி நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பாலை பொறியாளர் நகரை சேர்ந்தவர் சின்னு. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் குடும்பத்தோடு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அப்போது சின்னுவின் மகள் சுமதி கதவை திறந்துள்ளார். அப்போது திடீரென 6 பேர் சுமதியை தள்ளிவிட்டு வீட்டுக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து சுமதி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டனர். அப்போது சத்தம் கேட்டு முழித்த சின்னு கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். இதனால் கோபம் அடைந்த கொள்ளையர்கள் சின்னுவை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்டார். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.