கீழக்கரையில் விடுதலைப் புலிகள் ஊடுருவல்-போலீசார் சோதனை
கீழக்கரையை ஒட்டிய தீவுகளின் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ராமநாதபுரம், தூத்துக்குடிக்கு இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 சிறிய தீவுகள் உள்ளன. இதில் கீழக்கரை அருகே உள்ள முள்ளிதீவு, வாளைத்தீவு, அப்பாதீவு, தலையாரி தீவு ஆகிய பகுதிகளுக்கு விடுதலைப் புலிகள் வந்து போவதாகவும், சிலர் அங்கு பதுங்கி இருப்பதாகவும் உளவுப் பிரிவினருக்கு தகவல் வந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து மதுரையில் இருந்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சென்ற போலீசார் இந்த தீவுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந் நிலையில் கடற்படையின் தென் மண்டல அதிகாரி வென் ஹெல்ட்ரான் கூறுகையில், கீழக்கரை கடற்படை பகுதியில் விடுதலைப்புலிகள் நட மாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த பகுதியில் கடற்படையினரின் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. படகுகள், டீசல் கடத்தலுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இலங்கை அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் படகுகளில் உள்ள எரிபொருளை தங்களிடம் தர வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் நிர்பந்தம் செய்து வருகின்றனர் என்றார்.