10 மாணவர்கள் மயக்கம்
தமிழகத்தில் காலியாக உள்ள வேளாண் பணியிடங்களை நிரப்பக் கோரி கோவை வேளாண் பல்கலை மாணவர்கள் நடத்திய உண்ணாவிரப் போராட்டத்தில் 10 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள வேளாண் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென வேளாண் பல்கலை மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனைத் தொடர்ந்த வேளாண் கல்லூரி மற்றும் விடுதிகளை அரசு மூடியது. உடனடியாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். கடந்த 6 நாட்களாக இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது. கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த மாணவர்களில் ஒருசிலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாஸ்கரன், பொம்மண்ணன், சீனிவாசன், அன்பு, கோகுல்ராமன், வேணுதேவன், போஜ ராஜன், சுரேந்திரன், ஆயிஷா சுல்தானா, ஹேம லதா, பூரணி மற்றும் லதா ஆகிய 12 மாணவ, மாணவிகள் உண்ணாவிரதப் பந்தலில் மயங்கி விழுந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மயக்கத்தில் விழுந்து கிடந்த மாணவ, மாணவிகளை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் ஒருசில மாணவர்கள் மயங்கிவிழத் துவங்கியுள்ளனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.