வேப்பூரில் லாரி மீது வேன் மோதி 3 பேர் பலி…!!
கரூர் மாவட்டம் வீரராக்கியம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 80). இவரது மகள் கல்யாணி (47), மகன் சேகர் (45).
கல்யாணி திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். எனவே கோவிந்தம்மாளும் அவர்களுடனேயே தங்கி வசித்து வந்தார். அவருக்கு திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டது.
எனவே சேகர், தாயாரை தனது வீட்டுக்கு அழைத்து வர நேற்று ஒரு வாடகை வேனில் வீரராக்கியத்தில் இருந்து சென்னைக்கு சென்றார். அதே கிராமத்தை சேர்ந்த நாகப்பன் (35) வேனை ஓட்டிச் சென்றார்.
பிறகு சென்னையில் இருந்து கோவிந்தம்மாளை அழைத்து கொண்டு நேற்று நள்ளிரவில் வீரராக்கியத்துக்கு வேனில் புறப்பட்டனர். கல்யாணி, அவரது கணவர் சக்திவேல் (50), மகன் முருகன் (24) ஆகியோர் உடன் பயணம் செய்தனர்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் வேப்பூர் பஸ் நிலையம் அருகே வேன் வந்த போது, முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த லாரியின் பின்புறம் வேன் மோதியது.
இதில் வேனின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து உருக்குலைந்தது. வேனின் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் நாகப்பனும், சேகரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். கோவிந்தம்மாள், கல்யாணி, சக்திவேல், முருகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். படுகாயமடைந்த கோவிந்தம்மாள், கல்யாணி, சக்திவேல், முருகனை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு வேனின் இடிபாடுகளை கடப்பாரை உதவியுடன் அகற்றி சேகர், டிரைவர் நாகப்பன் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கோவிந்தம்மாள் பரிதாபமாக இறந்தார். கல்யாணி, சக்திவேல், முருகனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்து பற்றி வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் தாய்-மகன் மற்றும் வேனின் டிரைவர் பலியான சம்பவத்தால் அப்பகுதியில் சோகம் நிலவியது.
Average Rating